செய்திகள்

ஆரணி கடைகளில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை?: தாசில்தார் விசாரணை

ஆரணியில் பிளாஸ்டிக் முட்டை விற்கப்படுவதாக வந்த புகாரையடுத்து தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆரணி:

ஆரணி ராட்டினமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மகன் ஜானகிராமன். நெசவு தொழிலாளி. இவர், இன்று காலை, ஆரணி மார்க்கெட் வீதியில் உள்ள ஒரு கடையில் முட்டை வாங்க சென்றார். ஒரு முட்டை ரூ.2.50 என மொத்தம் 20 முட்டைகளை 50 ரூபாய் கொடுத்து வாங்கினார்.

வீட்டிற்கு சென்று முட்டைகளை தண்ணீரில் போட்டுள்ளார். முட்டைகள் தண்ணீரில் மிதந்தன. இதனால் சந்தேகமடைந்த ஜானகிராமன், தண்ணீரை கொதிக்க வைத்து முட்டைகளை வேகவைத்து உரித்து பார்த்தார்.

அப்போது உட்கரு பிளாஸ்டிக் போல் இருந்தது. இதனால் பிளாஸ்டிக் முட்டையாக இருக்கலாம் என்று சந்தேகமடைந்து, ஆரணி தாசில்தார் சுப்பிரமணியிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து மார்க்கெட் வீதிக்கு சென்ற தாசில்தார், ஜானகிராமன் முட்டை வாங்கிய கடையில் சோதனை நடத்தினார். கடையில் இருந்த முட்டைகளை எடுத்து தண்ணீரில் போட்டும், பிளாஸ்டிக் முட்டையா? என்று சோதனை செய்தார்.

மேலும், அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு தாசில்தார் பரிந்துரை செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT