சரக்கு ரெயில் தண்டவாளத்தில் இருந்து விலகி நின்ற காட்சி. 
செய்திகள்

அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது- சென்னை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டதால் சென்னை செல்லும் ரெயில்கள் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

மாலை மலர்

அரக்கோணம்:

மைசூரில் இருந்து சென்னை கார் கம்பெனியில் கார்களை ஏற்றுவதற்காக சரக்கு ரெயில் நேற்று இரவு புறப்பட்டு வந்தது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் வந்தது.

அங்குள்ள யார்டு லைன் அருகே வந்தபோது சரக்கு ரெயிலில் 5 மற்றும் 6-வது பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இதனால் ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. இது பற்றி அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பெங்களூரில் இருந்து வந்த காவேரி எக்ஸ்பிரஸ், கேரளவில் இருந்து வந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தபட்டன. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.

சென்னை மண்டல மேலாளர் மகேஷ், அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

தடம்புரண்ட பெட்டிகளை கழட்டி விட்டு மற்ற பெட்டிகள் யார்டு பகுதியில் நிறுத்தப்பட்டன. இதனையடுத்து 1½ மணி நேரத்துக்கு பிறகு காவேரி எக்ஸ்பிரஸ், ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. அதன்பிறகு வந்த ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன.

தடம் புரண்ட ரெயில் பெட்டியை சீரமைக்க கிரேன் கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் ரெயில் பெட்டிகளை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணிகளில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.