இஸ்லாமாபாத் :
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு உளவு குற்றச்சாட்டின்பேரில் பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இந்தியாவின் முறையீட்டை ஏற்று, மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானுக்கு சர்வதேச கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால், மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஜாதவ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே, அவருக்காக வக்கீல் நியமிக்க அனுமதிக்கக்கோரி, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் பாகிஸ்தான் அரசு மனுதாக்கல் செய்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி அதார் மினல்லா தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஜாதவ் வழக்கில் கோர்ட்டுக்கு உதவும் ஆலோசகர்களாக 3 மூத்த வக்கீல்களை நீதிபதிகள் நியமித்தனர். வக்கீல் நியமிக்க இந்தியாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்குமாறு பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், அதிக நீதிபதிகளை கொண்ட அமர்வுக்கு செப்டம்பர் 3-ந் தேதி வழக்கை மாற்றுமாறும் உத்தரவிட்டனர்.