செய்திகள்

உடுமலை சங்கர் கொலை வழக்கு- சின்னசாமி உட்பட 6 பேர் தூக்கு தண்டனையை எதிர்த்து அப்பீல்

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் பெற்ற தூக்கு தண்டனையை எதிர்த்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

மாலை மலர்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர்(22).

இவர் பழனியைச் சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்தார்.

இதன்காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 13-ந்தேதி உடுமலைப்பேட்டையில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். அப்போது அவருடன் இருந்த கவுசல்யாவும் படுகாயமடைந்தார்.

இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்ற கலை தமிழ்வாணன், மதன் என்ற எம்.மைக்கேல் ஆகிய 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஸ்டீபன் ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி தீர்ப்பளித்தது.


இந்த வழக்கில் கவுல்சயாவின் தாயார் அன்னலட்சுமி, தாய்மாமா பாண்டித்துரை, கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதைதொடர்ந்து, 6 பேருக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டதை உறுதி செய்ய, அந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதேபோல, தூக்கு தண்டனைப் பெற்ற சின்னசாமி உள்பட 6 பேரும், தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். ஆயுள் தண்டனை பெற்ற ஸ்டீபன்ராஜ், 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற மணிகண்டனும் மேல் முறையீடு செய்துள்ளனர்.

அதேபோல, கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, தாய்மாமா பாண்டித்துரை, மாணவர் பிரசன்னகுமார் ஆகியோரை கீழ் கோர்ட்டு விடுதலை செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் போலீஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.