செய்திகள்

ஜெயலலிதா ரத்த மாதிரி எங்களிடம் இல்லை- அப்பல்லோ மருத்துவமனை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்

ஜெயலலிதாவின் ரத்த மாதிரி தங்களிடம் இல்லை என, அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.#AmruthaCase #JayaBloodSamples #Apollo

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று உரிமை கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் அவர் தன் மனுவில் கூறியிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் ரத்த மாதிரி மற்றும் உயிரியல் மாதிரிகள் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியது. இதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. ஆனால் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

இந்நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஜெயலலிதாவின் ரத்த மாதிரி குறித்து அப்போலா நிர்வாகம் தரப்பில் நாளை (வியாழன்) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி அப்பல்லோ சார்பில் இன்று ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகளோ, திசு மாதிரிகளோ தங்களிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.