திருப்பதி:
திருப்பதி அருகே செம்மரகடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிபடையினர் சப்-இன்ஸ்பெக்டர் விஜய நரசிம்முலு தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செம்மரங்கள் கடத்துவதாக வந்த தகவலின்படி அந்த இடத்திற்கு அதிரடிப்படையினர் விரைந்தனர்.
அங்கு வாகனத்தில் 25 செம்மரங்கள் ஏற்றப்பட்டு இருந்தது. போலீசாரை பார்த்ததும் கடத்தல்காரர்கள் 30 பேர் காட்டுக்குள் புதர் பகுதிகளில் பதுங்கி தப்பி விட்டனர். கடத்தல் கும்பலை பிடிக்க சென்ற 2 போலீசார் பலத்த காயம் அடைந்தனர்.
மேலும் அந்த பகுதியில் 11 அடி ஆழமான கால்வாய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. கால்வாய் வழியாக கடத்தல் கும்பல செம்மரங்களை வெட்டி கொண்டு வந்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி காந்தா ராவ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியை பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல தொடர்ந்து நடக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குறைந்தது 7 இடங்களில் கடத்தல் கும்பலிடமிருந்து செம்மரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வன பகுதியில் லாரிகளை நிறுத்தி செம்மரங்களை ஏற்றும் 165 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் போலீசார் அதிகளவு ரோந்து செல்வார்கள் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதியில் செம்மரக்கடத்தல் காரர்களிடம் ரூ. 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை பேரம் பேசி ஆந்திர போலீசார் செம்மர கடத்தலுக்கு உதவுகின்றனர்.
நாங்கள் சிறிய குழுதான் எங்கள் குழு நியமிக்கபட்டபோது அரசாணையில் ஆந்திர வனத்துறை, இதர மாநிலங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆனால் எங்களுக்கு எந்த ஒத்துழைப்பும் இல்லை. சேஷாசலம் வனப்பகுதி அமைந்துள்ள சித்தூர், கடப்பா, நெல்லூர், பிரகாசம் கர்னூல் ஆகிய 5 மாவட்டங்களில் வன ஊழியர்கள் அதிகளவில் நியமிக்க வேண்டும்.
தற்போது செம்மரம் கடத்திய வாகனம் தமிழ் நாட்டில் இருந்து வந்துள்ளது. இந்த வாகனம் புத்தூர் சோதனை சாவடியை தாண்டி வந்துள்ளது அதற்கான ரசீதும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.