தெலுங்கு பட உலகில் நடிகை மற்றும் இயக்குனராக திகழ்ந்தவர் விஜய நிர்மலா. ‘பணமா பாசமா’ என்ற படத்தில் இடம் பெற்ற ‘எலந்த பழம்’ பாடலின் மூலம் புகழ் பெற்றார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருடனும் நடித்துள்ளார். ஏராளமான தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். 44 படங்களை டைரக்டு செய்து கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். இவரது கணவர் நடிகர் கிருஷ்ணா.
இருவரும் ஐதராபாத் நானகிராம் கூடா பகுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நடிகை விஜயநிர்மலாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை கட்சு பவுலியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று அதிகாலை அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.
நடிகை விஜயநிர்மலாவின் உடல் ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று அவரது உடலுக்கு தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் அஞ்சலி செலுத்தினார்.
இன்று காலை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, விஜய நிர்மலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் நடிகர்-நடிகைகள், திரை உலக பிரமுகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
விஜயநிர்மலா மறைவுக்கு நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகை விஜயசாந்தி கூறியதாவது:-
நடிகை விஜயநிர்மலா இயக்கத்தில் தான் நான் முதல் முதலாக நடித்தேன். அவருடைய கணவர் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தேன். அவரிடம் வேலை செய்பவர்கள் எல்லோருமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். அவர் இறந்தது வருத்தம் அளிக்கிறது. அவர் பெண்களுக்கு ரோல் மாடலாக இருந்தார். அதிக படங்கள் இயக்கி 2002-ம் ஆண்டு கின்னஸ் புக்கத்தில் இடம் பிடித்தார். அவரது சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை.
தென்னிந்திய இயக்குனர்களில் விஜயநிர்மலா அற்புத சாதனையாளர். அவர் இயக்கிய ‘சூரிய சந்திரா’ படத்தில் நடித்தேன். எனக்கு அதில் நல்ல கேரக்டர் கொடுத்தார். எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்தார்.
கிருஷ்ணாவும் அவரும் இணை பிரியாமல் வாழ்ந்து வந்தனர். கிருஷ்ணா உணவு பிரியர். அவருக்கு பிடித்த உணவுகளை விஜயநிர்மலா செய்து கொடுப்பார். இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள். அவரது பிரிவை தாங்கும் மன தைரியத்தை கிருஷ்ணாவுக்கு கடவுள் கொடுக்க வேண்டும்.
பழம் பெரும் நடிகை ஜமுனா கூறியதாவது:-
நாங்கள் இருவரும் ‘முகூர்த்த பழம்’ படத்தில் சேர்ந்து நடித்தோம். கிருஷ்ணாவுக்கு நான் ஜோடி. விஜயநிர்மலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் தயாரிப்பாளராகவும் இருந்தார். ஆனால் அவரிடம் கொஞ்சம் கூட கர்வம் இல்லை. நடிகைகள் இப்படி தான் இருக்க வேண்டும் என்பார். ரசிகர்களுக்கு ஏற்ற குடும்ப கதைகளை இயக்குவார். கிருஷ்ணாவும் அவரும் 47 படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். திருமணத்திற்கு முன்பு 10 படங்களில் நடித்தனர்.
52 வருடம் இருவரும் சேர்ந்து அன்பான வாழ்க்கை வாழ்ந்தனர். கிருஷ்ணா கண்ணீர் வடிப்பதை பார்க்க பாவமாக இருக்கிறது.
நானும் விஜயநிர்மலாவும் ‘அக்கா கெல்லுலு’ படத்தில் நடித்தோம். அந்த படத்தில் அவருக்கு ஜோடி கிருஷ்ணா. விஜயநிர்மலா இயக்கத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. படப்பிடிப்பு செட்டில் அவர் இருந்தாலே கலகலப்பாக இருக்கும். பெண்கள் சம்பந்தப்பட்ட படங்களே அவர் இயக்கியுள்ளார். சென்னை வந்தால் எங்கள் வீட்டிற்கு வருவார். நான் வைக்கும் வெண்டைக்காய் குழம்பு அவருக்கு பிடிக்கும்.
2 வருடங்களுக்கு முன்பு இருவரும் சந்தித்தோம். அது தான் கடைசி சந்திப்பு என்பது எங்களுக்கு தெரியாது. அதை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.