செய்திகள்

வாசாத்தி பாலியல் வழக்கில் தொடர்புடைய அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

தர்மபுரி மாவட்டம் வாசாத்தி மலை கிராம பெண்கள் 18 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

அந்தியூர்:

தர்மபுரி மாவட்டம் வாசாத்தி மலை கிராம பெண்கள் 18 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதில் ஈடுபட்டதாக போலீசார், வருவாய்த்துறையினர், வனத்துறையினர் 215 பேரை கோர்ட்டு குற்றவாளிகள் என உத்தரவிட்டது.

அவர்களுக்கு ஐகோர்ட்டு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அந்த வகையில் தண்டனை பெற்றவர்களில் தற்போது அந்தியூர் இன்ஸ் பெக்டராக பணிபுரிந்த சுப்பிரமணி என்பவரும் ஒருவர்.

வாசாத்தி சம்பவம் நடந்தபோது சுப்பிரமணி தர்மபுரியில் சப்-இன்ஸ் பெக்டராக பணிபுரிந்தார். 3 ஆண்டு தண்டனை பெற்றவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர்.

அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வருகிற 30-ந் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

அரசு பணியில் உள்ள ஒருவர் மீது வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தால் அவருக்கு பணி ஓய்வு ஆணை வழங்க முடியாது.

எனவே இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி சஸ்பெண்டு செய்யப்பட்டார். அதற்காக உத்தரவை சுப்பிரமணியிடம் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமன் வழங்கினார்.

பணி ஓய்வு பெற இன்னும் 3 நாட்கள் இருக்கும் நிலையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.