செய்திகள்

துணை ஜனாதிபதி அன்சாரிக்கு பிரிவு உபசார விழா: நினைவு பரிசு வழங்கினார் பிரதமர் மோடி

மாநிலங்களவையில் துணை ஜனாதிபதி அன்சாரிக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி நினைவு பரிசு வழங்கினார்.

புதுடெல்லி:

தொடர்ந்து 2-வது முறையாக துணை ஜனாதிபதி பதவியை வகித்த ஹமீது அன்சாரி நேற்றுடன் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இதனையொட்டி மாநிலங்களவையில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.

இதில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த எம்.பிக்களும் கலந்து கொண்டு ஹமீது அன்சாரியின் சேவைகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தனர்.

மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹமீது அன்சாரியிடமிருந்து பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டதாகக் கூறினார். நாட்டின் வளர்ச்சிக்காக இரவு பகலாக பாடுபட்டவர் ஹமீது அன்சாரி என்றும் தெரிவித்த பிரதமர் மோடி நினைவு பரிசினையும் வழங்கினார்.

இதனிடையே, மாநிலங்களவை தொலைக்காட்சிக்கு ஹமீது அன்சாரி அளித்துள்ள பேட்டியில், "இந்தியாவில், முஸ்லிம்கள் மத்தியில் அமைதியின்மை நிலவிவருகிறது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த நிலைதான். குறிப்பாக, தங்களுக்கு இங்கு பாதுகாப்பில்லை என்று முஸ்லிம்கள் மத்தியில் ஒரு எண்ணம் உருவாகியுள்ளது” என்ற கருத்தினை தெரிவித்து இருந்தார். இதற்கு பா.ஜ.க. தரப்பில் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியா மத்திய மந்திரியாக இருந்த வெங்கையா நாயுடு இன்று பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT