இஸ்லாமாபாத்:
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வெளிநாடுகளில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் சொத்துகளை குவித்து வைத்துள்ளதாக பனாமா பேப்பர்ஸ் மூலம் அம்பலமானது. இதனையடுத்து, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவின் விசாரணை அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை மையமாக வைத்து, பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நவாஸ் ஷெரிப்க்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது. இதனையடுத்து, தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், நவாஸ் ஷெரிப்க்கு எதிரான ஊழல் வழக்கில் தொடர்புடைய அவரது மகள் மரியம் ஷெரிப் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது:-
2018 - பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் ஷெரிப் பெருவாரியான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்பார். அதற்கு இன்றைய நாள் (சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு) உதவிகரமாக இருக்கும். ஆண்டவன் அருளால் (இன்ஷா அல்லாஹ்) அவர் மீண்டும் பதவிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. முடிந்தால் யாராவது அவரை தடுத்துப் பாருங்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மீண்டும் ஒருமுறை வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். ஆனால், இம்முறை அதிக ஆதரவுடனும், பலத்துடனும் அவர் வெளிப்பாட்டை பார்க்கப்போகிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.