ரயில் சேவை 
செய்திகள்

ரத்தான ரயில்களின் முன்பதிவு தொகையை திரும்ப பெரும் தேதி அறிவிப்பு

முழு முடக்கத்தால் ரத்தான ரயில்களுக்கான முன்பதிவு கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,65,714 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,403 ஆக உயர்ந்துள்ளது.  அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 84,598 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.  கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டாம் என்று  தமிழக அரசு தெற்கு ரெயில்வேயிடம் கோரிக்கை விடுத்த நிலையில், ஜூலை 31ந் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்திருந்தது.

மேலும் அந்த செய்தி குறிப்பில் சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும் என்றும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் முழு முடக்கத்தால் ரத்தான ரயில்களுக்கான முன்பதிவு கட்டணத்தை திரும்ப பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  முன்பதிவு ரயில் கட்டணத்தை மதுரை கோட்ட ரயில் நிலையங்களில் நாளை முதல் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, புனலூர், சிவகங்கை, ராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை ரயில் நிலையங்களிலும் பயணிகள் செலுத்திய முன்பதிவு கட்டணத்தை  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெறலாம் எனவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.