ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதற்காக, ஜன் லோக்பால் அமைப்பை கொண்டு வரக்கோரி காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே கடந்த 2011-ஆம் ஆண்டு டெல்லியில் மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.
அதன்பிறகு நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்திவந்த அன்னா ஹசாரே நிர்பயா வழக்கில் நீதி விரைவாக நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று அடையாள மவுன விரதம் மேற்கொண்டுள்ளார்.
நான் ஏற்கனவே பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தவாறு நிர்பயா வழக்கில் விரைவான நீதி வழங்கப்பட வேண்டும் என்று எனது மவுன விரதத்தை இன்று தொடங்கியுள்ளேன். இல்லாவிட்டால், அடுத்தக்கட்டமாக இனி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன்.
டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீதிமன்ற நடைமுறைகளில் ஏற்படும் தாமதத்தால்தான் சமீபத்தில் ஐதராபாத் நகரில் 4 கற்பழிப்பு குற்றவாளிகள் போலீசாரால் கொல்லப்பட்டதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
நீதி வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதம் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை மக்களிடம் இருந்து நீக்கியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட வேண்டும்.