செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே 9-ம் வகுப்பு மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்

ஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

தேனி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராஜகோபாலன்பட்டியைச் சேர்ந்த 13 வயதான 9-ம் வகுப்பு மாணவிக்கும் அதே ஊரைச் சேர்ந்த சதீஸ் (28) என்பவருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டார் பேசி முடித்தனர்.

2 பேருக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் குறித்து தேனி சைல்டு லைன் அமைப்பினருக்கு புகார்கள் வந்தது.

இதனையடுத்து சைல்டு லைன் உறுப்பினர்கள் மற்றும் ஆண்டிப்பட்டி போலீசார் மணமக்கள் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மணப்பெண் 9-ம் வகுப்பு படித்து வந்ததும் அவருக்கு 13 வயதே ஆனதும் தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மாணவியின் பெற்றோரிடம் எழுதி வாங்கிக் கொண்டனர். மேலும் மாணவியை கொடுவிலார்பட்டியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.