செய்திகள்

சென்னை மாநகராட்சியில் மானிய ஸ்கூட்டர் பெற முதற்கட்டமாக 1,400 பேர் தேர்வு

சென்னை மாநகராட்சியில் மானிய ஸ்கூட்டர் பெற முதற்கட்டமாக 1,400 பேர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சென்னை:

தமிழகத்தில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின்கீழ் ரூ.25 ஆயிரம் மானியத்தில் ஸ்கூட்டர் வாங்கிக்கொள்ள கடந்த மாதம் 22-ந் தேதி விண்ணப்ப வினியோகம் தொடங்கியது. அதன்பின்பு விண்ணப்ப வினியோக காலம் 10-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. கடந்த 10-ந் தேதி வரையிலான நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 36 ஆயிரத்து 103 பேர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியம் வழங்க அரசு திட்டமிட்டு இருக்கிறது.

இந்த திட்டத்திற்கு பெருநகர சென்னை மாநகராட்சியில் 35 ஆயிரத்து 28 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அந்த விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. அதில் முதற்கட்டமாக முறையான ஆவணங்களை தாக்கல் செய்த 1,400 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  #tamilnews

SCROLL FOR NEXT