செய்திகள்

ராகுல் காந்திக்கு அமித் ஷா கிடுக்கிப்பிடி: ‘உங்கள் குடும்பத்தின் 4 தலைமுறை ஆட்சியில் செய்தது என்ன?’

நாட்டை 50 ஆண்டுகளாக உங்களின் 4 தலைமுறை ஆட்சி செய்திருக்கிறது. அப்போது நீங்கள் செய்தது என்ன என்பது பற்றி நாட்டு மக்களுக்கு கணக்கு காட்ட வேண்டும்” என பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். அவர் அங்கிருந்தவாறு மத்திய பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியை சாடி வருகிறார். இதற்கு ஜார்கண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிற பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா நேற்று பதில் அளித்தார்.

ராஞ்சியில் ஹார்மு மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசியபோது, “அமெரிக்காவில் இருந்து கொண்டு ராகுல் காந்தி நாம் என்ன செய்தோம் என்று கேட்கிறார். அதற்கு ஜார்கண்டில் பதில் சொல்ல நாம் வந்திருக்கிறோம். நாட்டை 50 ஆண்டுகளாக உங்களின் 4 தலைமுறை ஆட்சி செய்திருக்கிறது. அப்போது நீங்கள் செய்தது என்ன என்பது பற்றி நாட்டு மக்களுக்கு கணக்கு காட்ட வேண்டும்” என்று கூறினார்.

மேலும், “ராகுல் காந்தி செய்ததை விட நாங்கள் மூன்று மடங்கு அதிகமாக செய்திருக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.