கர்நாடக மாநிலத்தில் வெள்ளப்பெருக்கால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பெலகாவி மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார்.
கர்நாடக மாநிலத்தில் தொடக்கத்தில் 2 மாதங்கள் முழுமையான அளவில் மழை பெய்யாத தென்மேற்கு பருவமழை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெளுத்து வாங்கி வருகிறது. வட கர்நாடகத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பெலகாவியில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
பெங்களூரு நகரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அம்மாநில முதல் மந்திரி எடியூரப்பா, கடந்த 45 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் 24 பேர் பலியானதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வெள்ளப்பெருக்கால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பெலகாவி மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் அம்மாநில முதல் மந்திரி எடியூரப்பா மற்றும் மாநில அரசின் தலைமை செயலாளர் ஆகியோரும் சென்று சேத விபரங்களை விளக்கி கூறினர்.