போரூர்:
சென்னையில் கடந்த ஆண்டு மழை நேரங்களில் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
இதை தடுக்க பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு இடங்களில் கூவம் ஆற்றங்கரையோரம் வசித்து வருபவர்களை காலி செய்து அவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகள் ஒதுக்கீடு செய்தும் வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக இன்று அமைந்தகரை என்.எஸ்.கே.நகரில் உள்ள கூவம் ஆற்றங்கரையோரம் வசித்து வரும் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் ஏற்கனவே மாநகராட்சி அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் அளித்தனர்.
மேலும் குடியிருப்பு வாசிகள் அனைவருக்கும் சோழிங்கநல்லூரை அடுத்து உள்ள பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியம் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதல் மண்டல உதவி கமிஷனர் பரந்தாமன் முன்னிலையில் பொக்லைன் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புக்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியிருப்பில் உள்ள அனைவரும் மாநகராட்சி ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம் பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியம் குடியிருப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். #tamilnews