செய்திகள்

ஆம்பூரில் கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை: 2 குழந்தைகளின் தந்தை கைது

ஆம்பூரில் கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த 2 குழந்தைகளின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

ஆம்பூர்:

ஆம்பூர் டவுன் இந்திரா நகரை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர், சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. முதுகலை பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் சுதாகர் (30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கல்லூரி மாணவி மீது ஒருதலையாக காதல் மோகம் கொண்ட சுதாகர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைக்கு சென்றார்.

அங்கு இருந்துக் கொண்டு, கல்லூரி மாணவிக்கு ஒரு தலையாக காதல் தொல்லை கொடுத்துள்ளார். ‘‘உனக்கு திருமணமாகி விட்டது, என் பின்னால் சுற்றாதே’’ என்று மாணவி கூறி கண்டித்துள்ளார்.

இதனை ஏற்க மறுத்த சுதாகர், ‘காதலிக்கிறேன்’ என்று சொல், மனைவியை விவாகரத்து செய்து விட்டு ‘‘உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’’ என்று கூறினார்.

வெறுப்படைந்த மாணவி, காதல் தொல்லை குறித்து ஆம்பூரில் உள்ள தனது பெற்றோருக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார்.

பெற்றோர் மாணவியை வீட்டிற்கு வருமாறு கூறினர். மாணவி ஆம்பூருக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து, சுதாகரும் சென்றார்.

மகளை தொந்தரவு செய்யாதே? என்றுக் கூறி சுதாகரை பெற்றோர் எச்சரித்தனர். அவர், கேட்பதாய் இல்லை.

இதையடுத்து, ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் மாணவியின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து சுதாகரை கைது செய்தனர்.