செய்திகள்

திருவோணம் அருகே அம்பேத்கர் சிலை உடைப்பு: விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல்

திருவோணம் அருகே நள்ளிரவில் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவோணம்:

திருவோணம் அருகே வெங்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதன் எதிரே மார்பளவு அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் இந்த அம்பேத்கர் சிலையை உடைத்து சேதப்படுத்தி விட்டனர். இதுபற்றிய தகவல் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் அப்பகுதியில் திரண்டனர். பின்னர் வாட்டாத்தி கோட்டையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கோட்டை அரசமாணிக்கம் தலைமையில் நிர்வாகிகள் ஆதவன் (எ) ஆனந்த், சத்தியமூர்த்தி, செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சாலை மறியல் பற்றிய தகவல் கிடைத்தும் வாட்டாத்தி கோட்டை போலீசார் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

சிலையை சேதப்படுத்திய வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து சாலை மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் சாலை மறியல் போராட்டத்தால் பட்டுக்கோட்டை-கறம்பக்குடி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.