செய்திகள்

இலங்கையில் தமிழர் பகுதியில் இந்தியா மேலும் நலத்திட்ட உதவிகள்: தூதர் அறிவிப்பு

தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் மேலும் பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த இந்தியா விரும்புகிறது. இந்த தகவலை இலங்கைக்கான இந்திய தூதர் கரன்ஜித்சிங் சாந்து தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

கொழும்பு:

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் தமிழர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மக்களின் வாழ்வாதாரம் அழிந்து விட்டது.

எனவே அங்கு நடை பெறும் மறு சீரமைப்பு பணியில் இந்தியா உதவி வருகிறது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் 46 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டிக் கொடுத்துள்ளது.

ஒமந்தை - பாலைக்கு ரெயில் பாதை அமைத்துள்ளது. அதற்காக மொத்தம் ரூ.5200 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும் வடக்கு மாகாணத்தில் பொருளாதார வளர்ச்சி திட்டங்களும், உடல் திறன் பயிற்சிகளும், வேலை வாய்ப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

இது போன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இலங்கையில் 2,535 கோடி நலத்திட்டங்கள் இந்தியாவால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் மேலும் பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த இந்தியா விரும்புகிறது. இந்த தகவலை இலங்கைக்கான இந்திய தூதர் கரன்ஜித்சிங் சாந்து தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சென்ற அவர் அங்குள்ள பல்கலைக் கழகத்துக்கு 16 ஆயிரம் புத்தகங்கள் வழங்கினார். மேலும் வடக்கு மாகாண முதல் மந்திரி சி.வி. விக்னேஷ்வரனை சந்தித்தார். அப்போது போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் வழங்கி உதவ இந்தியா தயாராக உள்ளது என்றார்.