ஸ்ரீநகர்:
பர்ஹான் வானி நினைவு தினத்தை முன்னிட்டு காஷ்மீரில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக கடந்த இரு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர். முதல் நாளாக 2,280 யாத்ரீகர்கள் மலையடிவாரத்தில் இருந்து அமர்நாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதி பர்ஹான் வானி நினைவு தினத்தை அனுசரிக்க போவதாக பிரிவினைவாதிகள் அறிவித்ததால் அங்கு பதற்ற நிலை நிலவியது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் யாத்திரை கடந்த இரு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று யாத்திரை மீண்டும் தொடங்கியது. 11-வது குழுவில் இடம்பெற்றிருந்த 8167 யாத்ரீகர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 1,94,771 யாத்ரீகர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளதாகவும், நேற்று 12 வது குழுவில் 4411 யாத்ரீகர்கள் 170 வாகனங்களில் பகவதி நகரில் இருந்து தரிசனத்திற்கு புறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.