செய்திகள்

அமர்நாத் யாத்திரை சென்று பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது

அமர்நாத் யாத்திரை தொடங்கி கடந்த 20 நாட்களில் 48 யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடல்மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள்.

பள்ளத்தாக்கான மலைப்பாதை வழியாக பாஹல்காம் பகுதியில் உள்ள மலையடிவார முகாமில் இருந்து 46 கிலோமீட்டர் தூரத்தை கடந்தும் பாஹல்காம் பகுதியில் உள்ள மலையடிவார முகாமில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்தை கடந்தும் அமர்நாத் ஆலயத்தை சென்றடைய வேண்டும்.

62-வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்த ஆண்டின் யாத்திரை கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி ரக்‌ஷா பந்தன் தினத்தன்று நிறைவடைகிறது. பல்டல் மற்றும் பாஹல்காம் முகாம்களில் இருந்து மலைப்பாதை வழியாக தினந்தோறும் குழுக்களாக செல்லும் யாத்ரீகர்கள் அமர்நாத் ஆலயத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு யாத்திரையின் இடைக்காலமான கடந்த 20 நாட்களில் மட்டும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர்.

அதேவேளையில், யாத்திரைக்கு சென்றவர்களில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தரிசனம் முடிந்து மலைப்பாதை வழியாக இறங்கிவந்த பக்தர் ஒருவர் நேற்று மாலை மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். சுமார் 60 வயது மதிக்கத்தக்க அந்த பக்தர் மத்தியப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இதனால், உடல்நிலை சார்ந்த உபாதைகளால் இந்த யாத்திரை காலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக, அனந்த்நாக் மாவட்டத்தில் யாத்ரீகர்கள் சென்ற பஸ்சின்மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியாகினர். மேலும், சாலை விபத்துகளில் 20 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். இதனால், இந்த ஆண்டின் அமர்நாத் யாத்திரை காலத்தில் பல்வேறு வகையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.