ஜம்மு:
ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் அமர்நாத் யாத்திரியை முடித்து திரும்பி வந்துகொண்டிருந்தவர்களின் பேருந்தை குறி வைத்து தீவிரவாதிகள் நேற்று இரவு நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த சில வருடங்களில் நடைபெற்ற மோசமான தாக்குதல் இது ஆகும்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டின் நடுவே தனது உயிரை பணயம் வைத்து பேருந்தில் உள்ள மீதமுள்ளவர்களின் உயிரை அதன் ஓட்டுநர் காப்பாற்றியுள்ளார்.
57 பயணிகள் சென்ற அந்த பேருந்தை ஷேக் சலீம் என்ற டிரைவில் ஓட்டி வந்தார். துப்பாக்கி சூடு தொடங்கியதும் டிரைவர் சலீம் பேருந்தை நிறுத்தி இருந்தால் உயிர் பலி எண்ணிக்கை அதிகமாயிருக்கும். ஆனால் அவர் பேருந்தை நிறுத்தாமல் பாதுகாப்பான இடத்தை நோக்கி பேருந்தை வேகமாக ஓட்டிச் சென்றார். இருட்டான பகுதிக்குள் சென்று பேருந்தினை பத்திரமாக நிறுத்தினார்.
காயமடைந்து மருத்துவமனையில் உள்ள ஒருவர் கூறுகையில், “அனைத்து பகுதிகளில் இருந்தும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தனர். சில நிமிடங்கள் இது தொடர்ந்தது. எங்களுடைய டிரைவர் துப்பாக்கிச் சூட்டை பொருட்படுத்தாமல் சில கிலோமீட்டர் தூரம் பேருந்தை ஓட்டிச் சென்றார். அவர் எங்களை காப்பாற்றினார்” என்றார்.