செய்திகள்

அலகாபாத்தின் பெயர் ‘பிரயாக்ராஜ்’ என மாறுகிறது - உத்தரபிரதேச முதல்-மந்திரி அறிவிப்பு

உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத் நகரின் பெயர் ‘பிரயாக்ராஜ்’ என்று மாற்றப்படுவதாக உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். #Allahabad #Prayagraj #YogiAdityanath

அலகாபாத்:

இந்தியாவில் பல நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன. அந்த வகையில் புதிதாக, உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத் நகரின் பெயர் ‘பிரயாக்ராஜ்’ என்று மாறுகிறது.

இது தொடர்பாக அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று அலகாபாத்தில் கும்ப மார்க்தர்ஷக் மண்டல் என்ற அமைப்பை சேர்ந்தவர்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், துறவிகள் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று விரைவில், அலகாபாத் என்ற பெயர் ‘பிரயாக்ராஜ்’ என மாற்றப்படும் என்றும், இதற்கு அனுமதி வழங்க கோரி மத்திய அரசுக்கு உத்தரபிரதேச அரசு கடிதம் எழுதும் என்றும் கூறினார்.

அலகாபாத் நகரின் பெயரை ‘பிரயாக்ராஜ்’ என மாற்றுமாறு துறவிகள் உள்ளிட்டோர் விடுத்துள்ள கோரிக்கைக்கு, மாநில கவர்னர் ராம்நாயக் ஏற்கனவே ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.  #Allahabad #Prayagraj #YogiAdityanath