செய்திகள்

கோரக்பூரில் 70 குழந்தைகள் பலியான சம்பவத்தில் கைதான டாக்டர் கபீல் கானுக்கு ஜாமின்

கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் பலியான நிலையில், சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கிய டாக்டர் கபீல் கான் கைதாகி 8 மாதங்களுக்கு பின்னர் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. #KafeelKhan

மாலை மலர்

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 70 பச்சிளம் குழந்தைகள் மரணமடைந்தன. ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு பணம் அளிக்காத காரணத்தால் சிலிண்டர் வழங்குவதை அந்நிறுவனம் நிறுத்தியது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, தனது சொந்த காசில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி மேலும் குழந்தைகள் பலியாகாமல் தடுத்த டாக்டர் கபீல் கான் என்பவர் கைது செய்யப்பட்டார். எட்டு மாதமாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பல முறை ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், லக்னோ ஐகோர்ட் கபீல் கானுக்கு ஜாமின் வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளது. #KafeelKhan #Gorakhpur