செய்திகள்

வன்முறை மேலும் பரவுவதை தடுக்க இலங்கை முழுவதும் சமூக வலைத்தளங்களுக்கு தடை

இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல் கலவரமாக உருவெடுத்துள்ள நிலையில் நாடு முழுவதும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. #SriLanka

மாலை மலர்

கொழும்பு:

இலங்கையின் கண்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். பொதுச் சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டது.

கலவரத்தை கட்டுப்படுத்த தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றை ராணுவம் மற்றும் போலீசார் பயன்படுத்தினர். நிலைமை விபரீதம் ஆவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த வன்முறை சம்பவங்கள் நாட்டின் பிறபகுதிகளுக்கு பரவுவதை தடுக்கும் வகையில் நேற்றிலிருந்து பத்து நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இருந்தாலும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்திகள் பரவுவதால் வன்முறை மேலும் தீவிரமடையும் சூழல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இலங்கை முழுவதும் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட தளங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. 

மேலும், கண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் மொபைல் சேவைக்கும் தடை விதித்து இலங்கை தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வன்முறை நடக்கும் பகுதிகள் அமைதிக்கு திரும்பியதும் இந்த கட்டுப்பாடு விலக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Srilanka