செய்திகள்

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல்: பொது பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்கா ஸ்ரீவஸ்தவா நியமனம்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பொது பார்வையாளராக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்கா ஸ்ரீவஸ்தவா நியமனம் செய்து தமிழக தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

இந்த இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 27-ம் தேதி தொடங்கியது. சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று முக்கிய வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய நேரம் கேட்டிருந்தனர். இதனால் தேர்தல் அலுவலக வளாகம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இன்று மதியம் தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வேட்பு மனுவை அளித்தார். இதேபோல் டிடிவி தினகரனும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் புதிய கொடியுடன் ஆதரவாளர்களுடன் வந்து தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை வழங்கினார்.  பிற்பகல் 1.40 மணியளவில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன்  வேட்பு மனுவை  தாக்கல் செய்தார்.

இந்நிலையில், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பொது பார்வையாளராக முன்னர் நியமிக்கப்பட்ட மத்தியப்பிரதேசம் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தீப் யாதவ் இன்னும் தமிழகம் வராத நிலையில், அவருக்கு பதிலாக தற்போது மத்தியப்பிரதேசத்தில் பணியாற்றிவரும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அல்கா ஸ்ரீவஸ்தவா என்பவரை நியமித்து தேர்தல் கமிஷன் இன்று உத்தரவிட்டுள்ளது.