பயங்கரவாதம் 
செய்திகள்

இந்தியா மீது தாக்குதல் நடத்துங்கள்- காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு அல்கொய்தா உத்தரவு

பொருளாதாரத்தை சீர் குலைக்கும் வகையில் இந்தியா மீது தாக்குதல் நடத்துங்கள் என்று காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு அல்கொய்தா உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனாக இருப்பவன் அய்மன் அல் ஜவகரி.

இவன் வீடியோவில் இந்தியாவை மிரட்டும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளான். அந்த வீடியோவில் அவன் கூறி இருப்பதாவது:-

இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலைக்கப்பட வேண்டும். இந்திய பொருளாதாரம் சீர்குலைந்தால்தான் இந்தியாவையும், இந்திய மக்களையும் பாதிக்க செய்ய முடியும்.

இதற்கு காஷ்மீரில் உள்ள போராளிகள் இடைவிடாமல் தாக்குதல் நடத்த வேண்டும். இந்தியாவின் முக்கிய நிலைகளை தாக்கி அழித்து பெரிய சேதத்தை ஏற்படுத்துங்கள்.

இந்தியாவின் மனித சக்தியையும், உள்கட்டமைப்புகளையும் உடைக்கும் வகையில் போர் நடத்தப்பட வேண்டும். இந்தியாவுக்கு தாங்க முடியாத சேதத்தை ஏற்படுத்த வேண்டும்.

இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து அந்த நாட்டை வறுமைக்குள் தள்ள வேண்டும். இதற்காக நீங்கள் பாகிஸ்தான் நாட்டையும் நம்பாதீர்கள்.

பாகிஸ்தான் நாட்டு அரசியல் தலைவர்கள் தங்களது சுய அரசியல் லாபத்துக்காக உங்களை பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடாதீர்கள்.

இவ்வாறு அல்கொய்தா தலைவன் அய்மன் கூறி உள்ளான்.

அவன் பேசிய வீடியோ அசப் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அரபி மொழியில் அவன் பேசி இருக்கிறான்.

அய்மன் ஜவகரி பேசும் வீடி யோவில் மூசா என்பவன் படம் காண்பிக்கப்பட்டது. இவன் காஷ்மீரில் அல்கொய்தா கிளையை தொடங்கியவன். இதுபற்றி தெரிந்ததும் கடந்த மே மாதமே இவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்று கதையை முடித்து விட்டனர்.

காஷ்மீரில் புல்வாமா பகுதியில் பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு மத்திய பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். புல்வாமா சம்பவத்துக்கு பிறகு 93 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கொட்டம் ஒடுக்கப்பட்டுள்ளது.