செய்திகள்

அரியானா: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ், அகாலி தளம் தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டியதால் பரபரப்பு

அரியானா மாநிலத்திற்கு சென்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் அகாலி தளம் தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மொகாலி:

டெல்லி, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றில் அதிக அளவிலான மாசு கலந்திருப்பதால் மூச்சு விடுவதற்கும் கடினமாக உள்ளது. 

அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவிலான கோதுமை கதிர்கள் எரிக்கப்படுவதே இதற்கு காரணமென டெல்லி முதல்வர் கூறியுள்ளார். இந்த பிரச்சனையை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த பிரச்சனை குறித்து அரியானா மாநில முதல்வருடன் விவாதிப்பதற்காக கெஜ்ரிவால் இன்று அரியானா மாநிலத்திற்கு சென்றார். 

சண்டிகர் விமானநிலையத்திற்கு வந்த அவருக்கு எதிராக அங்கு கூடியிருந்த காங்கிரஸ் மற்றும் அகாலி தளம் தொண்டர்கள் திடீரென கருப்புக்கொடி காட்டினர். மேலும் கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து கெஜ்ரிவால் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டார்.

இதுகுறித்து அகாலி தளம் தலைவர் ஹர்மன்பிரீத் சிங் பிரின்ஸ் கூறுகையில், “கெஜ்ரிவால் பஞ்சாப் இளைஞர்களை போதைக்கு அடிமையானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது கட்சியை சேர்ந்த கஹாரியா மீது போதைப்பொருள் தடுப்புப்பிரிவு சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது அவர் அமைதியாக இருக்கிறார். கஹாரியாவை கெஜ்ரிவால் பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.