காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
குஜராத் தேர்தலில் வெற்றிபெற பிரதமர் நரேந்திர மோடி மக்களை உணர்வு பூர்வமாக மிரட்டியிருக்கிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் மோடி குறித்து விமர்சித்ததை கெட்டியாக பிடித்துக் கொண்ட மோடி அது தனக்கு மட்டுமல்ல குஜராத் மக்களுக்கே தலைகுனிவு என்ற ரீதியில் பிரசாரம் செய்தார்.
மற்றொரு தலைவர் கபில்சிபல் அயோத்தி வழக்கை 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் கூறியதையும் பா.ஜனதாவினர் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொண்டனர். உண்மையில் அது காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல.
இதுதான் குஜராத்தில் காங்கிரசின் வெற்றியை தடுத்துவிட்டது. எதிர் காலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
குஜராத் தேர்தலில் பா.ஜனதா தங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தியது. அதனை எதிர்த்து காங்கிரசுக்கு குறிப்பிடத்தக்க வெற்றியை தேடித்தந்த பெருமை ராகுல்காந்தியை சேரும்.
குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக பேசியதன் மூலம் தன்மீதான நம்பகத்தன்மையை மோடி இழந்துவிட்டார்.