புதுடெல்லி:
கடந்த 2006-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்த போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது.
இந்த முதலீடு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரி சபை குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்கு பிரதிபலனாக லஞ்சப்பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சி.பி.ஐ. யும், சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிடோர் மீது வழக்குப்பதிவாகி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இந்த வழக்கு டெல்லி சிறப்பு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் கோர்ட்டில் விசாரணையின் தற்போதைய அறிக்கையை தாக்கல் செய்தது.
மலேசியாவில் இருந்து சில தகவல்கள் வரவேண்டி இருப்பதாகவும், அதற்காக காத்து இருப்பதாகவும் சி.பி.ஐ. கோர்ட்டில் தெரிவித்தது.