செய்திகள்

ஜனவரி 31-ம் தேதியுடன் ஏர்செல் சேவை நிறுத்தம்: டிராய் அதிரடி அறிவிப்பு

ஜனவரி 31-ம் தேதியுடன் ஏர்செல் நிறுவனம் 6 மாநிலங்களில் வழங்கி வரும் டெலிகாம் சேவையை நிறுத்திவிடும் என இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு இலவச இண்டர்நெட் மற்றும் கால் சேவைகளை வழங்கியது. இதன் காரணமாக பலர் மற்ற நிறுவனங்களில் இருந்து ஜியோவுக்கு மாற தொடங்கினர். அதனால் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஏர்டெல், வோடோபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் முதலில் தடுமாறினாலும் பின்னர் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்து அதிரடி சலுகைகளை அறிவித்தனர். மற்ற நிறுவனங்கள் தாக்கு பிடிக்க முடியாமல் தவித்தது.

பிற நெட்வொர்க்களுடன் போட்டிப்போட்டு சேவை வழங்க முடியாததால் ஏர்செல் நிறுவனம் 6 மாநிலங்களில் தனது சேவையை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது என இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது. குஜராத், மராட்டியம், அரியானா, இமாச்சலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வழங்கி வரும் சேவையை ரத்து செய்ய உள்ளது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க்குகளுக்கு மாறவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனம் சேவையை நிறுத்திக்கொண்டது. தற்போது ஏர்செல் நிறுவனம் 6 மாநிலங்களில் தனது சேவை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. வருவாய் குறைவாக இருப்பதாகவும், இதனை வைத்து சிறப்பான சேவை வழங்க முடியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் ஏர்செல் நிறுவனம் தனது சேவையை தொடர்ந்து வழங்கும் என்றும் இதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.