சென்னை:
ஐகோர்ட்டில், சரவணகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழகத்தில் 25 லட்சம் பேர் ஏர்செல் செல்போன் நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக 9 ஆயிரம் டவர்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், இந்த நிறுவனத்தின் சேவை திடீரென பாதிக்கப்பட்டது. 6 ஆயிரத்து 500 டவர்கள் சிறப்பாக செயல்படுவதாக அந்த நிறுவனத்தின் சார்பில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், பிப்ரவரி 22-ந்தேதி முதல் ஏர்செல் இணைப்பில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது.
ஆதார் எண், மானிய சிலிண்டர் இணைப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்களது ஏர்செல் நம்பரைதான் கொடுத்துள்ளனர். இப்போது அந்த வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வேறு செல்போன் நிறுவனங்களுக்கு மாறும் வரை, ஏர்செல் சேவையை தொடரவேண்டும். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் ஏர்செல் நிறுவனமும், மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் (டிராய்) வருகிற 9-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். #tamilnews