செய்திகள்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு- சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை மேலும் நீட்டிப்பு

ஏர்செல் மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram

ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தீவிரமடைந்த நிலையில், முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த சிபிஐ நீதிமன்ற தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி, இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். அதன்பின்னர் வழக்கு விசாரணையின் தன்மைக்கு ஏற்ப, இந்த தடை உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

கடைசியாக டிசம்பர் 18-ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் சிலரை வழக்கில் சேர்ப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டியிருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, ஜனவரி 11ம்தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.