செய்திகள்

காளைகளை அடக்கிய 8 வீரர்களுக்கு விமான டிக்கெட் பரிசு

திண்டுக்கல் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் அடக்க முடியாது என கருதப்பட்ட காளைகளை அடக்கிய 8 வீரர்களுக்கு விமான டிக்கெட் பரிசாக வழங்கப்பட்டது.

மாலை மலர்

திண்டுக்கல்:

திண்டுக்கல்லை அடுத்த கொசவபட்டியில் புனித அந்தோணியார் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. திண்டுக்கல், மதுரை, திருச்சி, ஈரோடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 560 காளைகள் சீறிப்பாய்ந்தன.

காளைகளை அடக்க 450 வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதில் சுழற்சி முறையில் ஒரு சுற்றுக்கு 150 வீரர்கள் என்ற முறையில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில், நத்தம் மற்றும் சாணார்பட்டியை சேர்ந்த இளம்பெண்களும் தாங்கள் வளர்த்த காளைகளை வாடிவாசல்வரை வந்து அவிழ்த்து விட்டனர்.

விறுவிறுப்பாக நடந்த இந்த ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களின் பிடியில் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், எவல்சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 53 பேர் காயம் அடைந்தனர். ஜல்லிக்கட்டில் சிறந்த வீரர்களுக்கு, மதுரையில் இருந்து சென்னை செல்வதற்கான விமான டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் உயிரை பணயம் வைத்து காளைகளை அடக்க வீரர்கள் மல்லுக்கட்டினர். இதில் அடக்க முடியாது என கருதப்பட்ட காளைகளை அடக்கியதற்காக மதுரை மேலூரை சேர்ந்த சதீஷ் உள்பட 8 வீரர்களுக்கு விமான டிக்கெட் பரிசாக வழங்கப்பட்டது. #tamilnews