ஏர் இந்தியா விமான நிறுவனமானது தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால், இதன் பங்குகளை தனியாரிடம் விற்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் மேற்குவங்காளம் மாநிலம் பாக்தோக்ரா என்ற இடத்திலிருந்து தலைநகர் டெல்லி நோக்கி கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தில் ஏ.சி இயந்திரம் பழுதடைந்தது.
இதன் காரணமாக பல பயணிகள் மூச்சுத் திணறலில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர். சில பயணிகள் செய்தித் தாள்களை வீசி காற்று கிடைக்குமா? என ஏங்கினர். இதனையடுத்து, ஆத்திரமடைந்த சிலர் விமான பணியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோளாறு சிறிது நேரத்தில் சரிசெய்யப்படும் என விமான பணியாளர்கள் வாக்குறுதி அளித்தாலும், கடைசி வரை ஏ.சி.யில் காற்று வராமலேயே இருந்தது.
விமானத்தில் உள்ளே காற்று இல்லாமல் பயணிகளின் திண்டாடியது வீடியோவாக வெளியாகி ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் ஏர் இந்தியா நிர்வாகத்தை விமர்சித்து தங்களது கருத்துக்களை பலர் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, டெல்லியில் விமானம் தரையிறங்கியதும், பயணிகள் விமான நிர்வாகத்தை வசைபாடி செல்வதும் வீடியோவாக வெளியானது.