மும்பை:
மும்பையில் இருந்து புவனேஸ்வர் நகருக்கு 155 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. இன்று பிற்பகல் 2.15 மணியளவில் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் விமானி அறையில் இருந்து புகை வெளியேறியது. இதையடுத்து, விமானம் மீண்டும் மும்பை விமான நிலையத்துக்கே திருப்பி விடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
உரிய நேரத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் புகை வெளியானதற்கான காரணம் குறித்து என்ஜினியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் பத்திரமாக புவனேஸ்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.