செய்திகள்

முன்னாள் காதலியின் ஆவி ஏவியதாக கூறி மனைவி, மகளை கொன்று தொழில் அதிபர் தற்கொலை

அகமதாபாத்தில் முன்னாள் காதலியின் ஆவி தன்னை இயக்குவதாக கூறிய தொழில் அதிபர் மனைவி, மகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.

அகமதாபாத்:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் குணால் திரிவேதி (வயது 45). அழகு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவர் தனது மனைவி கவிதா (45), மகள் ஷிரீன் (16), தாயார் ஜெயஸ்ரீ பென் (75) ஆகியோருடன் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார்.

அவரது உறவினர்கள் திரிவேதிக்கு போன் செய்தனர். நீண்ட நேரமாக ரிங் கொடுத்தும் போனை எடுக்கவில்லை.

எனவே, நேரடியாக வீட்டுக்கு வந்து பார்த்தனர். அங்கு குணால் திரிவேதி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். மனைவி கவிதா, மகள் ஷிரீன் ஆகியோர் அடித்து கொல்லப்பட்ட நிலையில் தரையில் பிணமாக கிடந்தனர். தாயார் ஜெயஸ்ரீபென் மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதுபற்றி போலீசாருக்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர். 3 பேர் பிணத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜெயஸ்ரீபென் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வி‌ஷத்தை கொடுத்துள்ளனர். இதனால் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

இந்த சம்பவத்துக்கு காரணம் என்ற என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குணால் திரிவேதி எழுதி வைத்திருந்த 2 கடிதங்கள் கிடைத்தன.

அதில், தன்னை இறந்து போன முன்னாள் காதலியின் ஆவி இயக்குவதாகவும், அதனால்தான் குடிகாரனாக மாறி விட்டேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மற்றொரு கடிதத்தில் காதலியின் ஆவி ஏவுவதால் குடும்பத்தினரை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்து விட்டு கடவுளிடம் செல்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த சாவுக்கு கடன் பிரச்சினையோ, மற்ற வி‌ஷயங்களோ காரணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

தனது மூட நம்பிக்கையால் குணால் திரிவேதி குடும்பத்தையே கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. #tamilnews