பலாசோர்:
ஒடிசா மாநிலம் அருகே வங்க கடல் பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவில் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி-1 (ஏ) ஏவுகணையை செலுத்தி இன்று காலை 8.30 மணிக்கு சோதனை நடத்தப்பட்டது.
15 மீட்டர் உயரமும், 12 டன் எடையும் கொண்ட இந்த குறைந்த தூர இலக்கை தாக்கும் ஏவுகணை சுமார் 700 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கவல்லது. இந்த ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கும் வகையில் சிறப்பான வழிகாட்டுதல் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 1 டன் அணு ஆயுதங்களை தாங்கி சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கக்கூடிய வகையில் இந்த ஏவுகணையை மேம்படுத்தி உள்ளனர்.
இந்த சோதனையை இந்திய ராணுவம் இன்று வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இது 700 கி.மீ. தூரத்தை தாக்கும் பிரிவில் 18-வது ஏவுகணையாகும்.