செய்திகள்

பீகாரில் மோதல் முற்றுகிறது: தேஜஸ்வி பதவி விலக மீண்டும் ‘கெடு’ விதிப்பு?

பீகாரில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக துணை முதல்வர் பதவியில் இருந்து விலக தேஜஸ்விக்கு மீண்டும் கெடு விதிக்க முதல்-மந்திரி நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளார்.

மாலை மலர்

பாட்னா:

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் முதல்வராகவும், ராஷ்டீரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி துணை முதல்வராகவும் உள்ளனர்.

இந்த நிலையில் 2006-ம் ஆண்டு ரெயில்வே அமைச்சகத்தில் நடந்த ஊழலில் லாலு பிரசாத் யாதவுடன் தேஜஸ்வி பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து துணை முதல்வர் பதவியில் இருந்து தேஜஸ்வி ராஜினாமா செய்ய நெருக்கடி எழுந்தது. ஆனால் தேஜஸ்வி ராஜினாமா செய்யமாட்டார் என்று லாலு அறிவித்தார்.

என்றாலும் தேஜஸ்வி தனது நிலை பற்றி உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே தேஜஸ்விக்கு மீண்டும் கெடு விதிக்க முதல்-மந்திரி நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் இது தொடர்பான அதிரடியை அவர் மேற்கொள்வார் என்று தெரிய வந்துள்ளது.

இதனால் பீகாரில் மெகா கூட்டணியில் பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பிளவை தடுக்க காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்து விட்டது.