செய்திகள்

ஜனாதிபதி பதவிக்கு, அத்வானி மிகவும் தகுதியானவர்: சத்ருகன் சின்கா சொல்கிறார்

ஜனாதிபதி பதவிக்கு பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி, மிகவும் தகுதியானவர் என கட்சியின் எம்.பி.யும், நடிகருமான சத்ருகன் சின்கா கூறியுள்ளார்.

புதுடெல்லி:

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 17-ந் தேதி நடக்கிறது. புதிய ஜனாதிபதிக்கான வேட்பாளரை தேர்வு செய்யும் பணிகளில் ஆளும் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

இந்த நிலையில் ஜனாதிபதி பதவிக்கு பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி, மிகவும் தகுதியானவர் என கட்சியின் எம்.பி.யும், நடிகருமான சத்ருகன் சின்கா கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அந்த பதவிக்கு அத்வானியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அவரது ஆர்வலர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் கருத்துகளை நான் உறுதியாக எதிரொலிக்கிறேன்.

மதிப்புமிக்க அந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவராக, மரியாதைக்குரியவராக, அனுபவம் மிகுந்தவராக, தகுதியானவராக அத்வானி இருப்பார்’ என்று குறிப்பிட்டு உள்ளார். பா.ஜனதாவின் பிதாமகனான அத்வானிக்கு அந்த கவுரவம் வழங்கப்படும் என்று உறுதியாக நம்புவதாக கூறியுள்ள சத்ருகன் சின்கா, நாட்டு மக்கள் அனைவரும் அத்வானிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.