மக்களவையில் இன்று முத்தலாக் மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அதிமுக எம்பி அன்வர் ராஜா பேசியதாவது:-
முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் இந்த முத்தலாக் சட்டம் நேரடியாக தலையிடுகிறது. இந்திய அரசியலமைப்பு அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இந்த மசோதா உள்ளது. உணர்ச்சிகரமான விஷயத்தில் கண்மூடித்தனமாக மத்திய அரசு செயல்படுகிறது. முத்தலாக் பிரச்சனையில் கணவருக்கு 3 ஆண்டு சிறைதண்டனை விதிப்பது நியாயமற்றது. இஸ்லாமிய ஆண்களுக்கு எதிரான இந்த சட்டத்தை நான் எதிர்க்கிறேன்.
இந்த மசோதாவை கொண்டு வருவதால் மத்திய அரசு என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? கண்துடைப்புக்காகவே மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. தற்போதைய வடிவில் இந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது. இதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும். எனவே, இந்த மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அன்வர் ராஜா பேசினார். இந்த விவாதத்தில் அன்வர் ராஜா தமிழில் பேசியது குறிப்பிடத்தக்கது.