செய்திகள்

சட்டசபையில் இருந்து தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. வெளிநடப்பு

சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவரே சபாநாயகருடன் வாக்குவாதம் செய்துவிட்டு, வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாலை மலர்

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஆண்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் (டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்) துணை கேள்வி கேட்க கையை உயர்த்தியபடி இருந்தார். தன்னை பேச அனுமதிக்கும்படி கூறினார்.

ஆனால் சபாநாயகர் தனபால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அடுத்த கேள்விக்கு சென்றுவிட்டார்.

இதனால் தங்க தமிழ்ச்செல்வனுக்கு கோபம் ஏற்பட்டது. அவர் எழுந்து, “முக்கியமான பிரச்சனை குறித்து பேச நினைத்தால் நீங்கள் வாய்ப்பு தர மறுக்கிறீர்கள். இது என்ன நியாயம்?” என்றார்.

அதற்கு சபாநாயகர், “வாய்ப்பு கிடைக்கும் போது உங்களுக்கு அனுமதி தருவேன். இப்போது நேரமாகிவிட்டது” என்றார்.

உடனே தங்க தமிழ்ச்செல்வன் கோபத்துடன் இருக்கையைவிட்டு வெளியேறி வெளிநடப்பு செய்தார்.


பிறகு நேராக அவர் சட்டசபை வளாகத்தில் உள்ள கேண்டீனுக்கு சென்றார். அவரிடம் நிருபர்கள் இதுபற்றி கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

ஆண்டிப்பட்டி தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பது குறித்து நான் பேச முயற்சி செய்தேன். ஆனால் சபாநாயகர் வாய்ப்பு தர மறுத்துவிட்டார்.

இது என்ன நியாயம்? எனவே தான் நான் ஆவேசத்தில் பேசினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவரே சபாநாயகருடன் வாக்குவாதம் செய்துவிட்டு, வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.