செய்திகள்

குட்ட குட்ட குனிய வேண்டாம்: மத்திய அரசுக்கு எதிராக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. திடீர் போர்க்கொடி

மத்திய அரசுக்கு எதிராக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான ராஜன் செல்லப்பா மதுரை முல்லை நகரில் நடைபெற்ற அங்கன்வாடி மைய திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கடுமையாக உயர்த்திக் கொண்டே போகிறது. தாறுமாறாக இப்படி விலையை அதிகரித்தது கண்டனத்துக்கு உரியதாகும்.

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மக்களை பாதிக்கும் பல்வேறு வி‌ஷயங்களில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளார். பலமுறை கண்டன மும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக பல்வேறு கால கட்டங்களில் ஜெயலலிதா தலைமையில் மிகப்பெரிய போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன.

தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 80 வரை செலவாகிறது. கச்சா எண்ணை விலை குறைந்து வரும்போது பெட்ரோல், டீசல் விலை மட்டும் ஏன் உயர்ந்து கொண்டே செல்கிறது? பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் ஜெயலலிதாவின் கனவு திட்டமாகும். பெண்கள் வேலைக்கு எளிதாக சென்று வரவே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் இரு சக்கர வாகனம் வாங்கும் பெண்கள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவதற்கு பணம் இல்லாத நிலை ஏற்பட்டால் இந்த திட்டமே நீர்த்து போகும்.

எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.


அ.தி.மு.க. சார்பில் முதல்- அமைச்சர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியாவது மத்திய அரசை கண்டிக்க வேண்டும்.

இந்த கோரிக்கை ஏற்கப்படும் என்று நம்புகிறேன். ஏற்கப்படாவிட்டால் மதுரை மாவட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக அ.தி.மு.க. போராட்டம் நடத்தும்.

மத்திய அரசை எதிர்த்து இரு சக்கர வாகன பேரணி நடத்துவோம். இதற்கான அறிவிப்பு நாளை மறுநாள் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்படும்.

மாநில அரசு, மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது நல்லதுதான். ஆனால் மக்களை பாதிக்கும் வி‌ஷயங்களிலும் அமைதியாக இருப்பது நல்லதல்ல. குட்ட குட்ட குனிந்து கொண்டே இருக்க முடியாது. எதற்கும் ஒரு எல்லை உண்டு.

எனவே கட்சியின் நலன் கருதி முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசுக்கு எதிராக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா திடீர் போர்க்கொடி தூக்கி உள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT