செய்திகள்

நொறுக்கு தீனிக்கு கூடுதல் பணம் வசூல்: தியேட்டர் கடைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தியேட்டர் கடையில் நொறுக்கு தீனிக்கு கூடுதல் பணம் வசூலித்த வழக்கில் சம்பந்தப்பட்ட ரசிகருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கும் படி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

கோயம்பேட்டைச் சேர்ந்தவர் கார்த்திக் மாணிக்கம். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள சங்கம் தியேட்டரில் படம் பார்க்க சென்றார்.

இடைவேளையின்போது தியேட்டரில் உள்ள கடையில் பாப்கான் மற்றும் சிக்கன் டிக்கா வாங்கினார். அதற்கான ரூ.140 தொகைக்கு தனது கிரெடிட் கார்டு கொடுத்தார். கடைக்காரர் கார்டில் இருந்து 150 ரூபாய் எடுத்தார்.

கூடுதலாக 10 ரூபாய் எடுத்தது பற்றி கார்த்திக் மாணிக்கம் கேட்டார். அதற்கு சேவை கட்டணம், வங்கி பரிமாற்றம் ஆகியவற்றுக்கு கூடுதலாக ரூ.10 எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி கார்த்திக் மாணிக்கம் வங்கியை தொடர்பு கொண்டு கேட்ட போது, “அதுபோன்று கூடுதல் கட்டணம் வசூலிக்க சொல்லவில்லை” என்று தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் குறை தீர்ப்பு மன்றத்தில் புகார் செய்தார். இந்த புகாரை மன்றத்தின் தலைவர் ஜெயபாலன், உறுப்பினர் உயிரொலி கண்ணன் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் தியேட்டரில் உள்ள கடை ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அந்த தொகையை பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும் கூடுதலாக வசூலித்த ரூ.10-ம் அளிக்க வேண்டும் என்று கூறினர்.

நஷ்டஈடு தொகையை 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டும். அதற்குள் தரவில்லை என்றால் அன்றைய தேதியில் இருந்து 9 சதவீதம் வட்டி போட்டு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர். #Tamilnews

SCROLL FOR NEXT