செய்திகள்

திருமங்கலம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை-கணவர் கைது

கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்ததோடு 2-வது திருமணமும் செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

பேரையூர்:

திருமங்கலம் அருகே சுந்தராம்பட்டியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி என்ற சரண்யா (வயது27). இவர் மம்சாபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

ஓட்டல் நடத்தி வந்த சிவக்குமாருக்கும், சரண்யாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சரண்யா கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.

இந்த நிலையில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் சரண்யா புகார் கொடுத்துள்ளார்.அதில் கூறி இருப்பதாவது:-

கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த நிலையில் அவர் மதுரை செல்லூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஆண்டு 2-வதாக திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து நான் கேட்டபோது 40 பவுன் நகை மற்றும் ரூ.8 லட்சம் மதிப்பிலான வீட்டை என் பெயருக்கு எழுதி தந்தால் உன்னுடன் வாழ்கிறேன் என மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சிவக்குமார், அவரது தந்தை சிவனாண்டி, தாய் வைரமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.