செய்திகள்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் நாளை வேட்பு மனு தாக்கல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் நடிகர் விஷால் நாளை காலை எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்திய பின்னர் பகல் 12.30 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

சென்னை:

ஜெயலலிதா மறைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் தவிர டிடிவி தினகரன், ஜெ.தீபா, கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

நாளை காலை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்திய பின்னர் பகல் 12.30 மணியளவில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT