முதலமைச்சர் பழனிசாமி தாயார் மறைவுக்கு நடிகர் விஜய் சேதுபதி அஞ்சலி 
செய்திகள்

தாயார் மறைவு - முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் விஜய் சேதுபதி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சேதுபதி சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.

மாலை மலர்

சென்னை:

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12-ந் தேதி காலமானார். அவரின் இறுதி அஞ்சலி மற்றும் காரிய நிகழ்வுகள் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் நடைபெற்றது.

இந்த காரிய நிகழ்வுகளை பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதை முடித்துக்கொண்டு நேற்று சிலுவம்பாளையத்தில் புறப்பட்டு இருந்து சென்னை வந்தடைந்தார்.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சேதுபதி இன்று சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.

முதலமைச்சரின் தாயார் உருவப்படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வுக்கு பிறகு முதலமைச்சர் இல்லத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த செய்தியாளர்களை நடிகர் விஜய் சேதுபதி சந்தித்தார். 

அப்போது 800 பட விவகாரம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, ‘நன்றி... வணக்கம்... என்றால்

எல்லாம் முடிந்து விட்டது... இதை பற்றி பேசி இனி ஒன்றும் இல்லை’ என தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.