செய்திகள்

செக் மோசடி வழக்கில் நடிகர் ராஜ்பால் யாதவுக்கு 6 மாதம் சிறை

செக் மோசடி வழக்கில் நடிகர் ராஜ்பால் யாதவுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனையும், மேலும் அவர் ரூ.11.20 கோடியை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

புதுடெல்லி:

இந்திப் பட உலகில் பிரபல நகைச்சுவை நடிகர் ராஜ்பால் யாதவ். இவர் சினிமா படம் தயாரிப்பதற்காக டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபரிடம் ரூ.8 கோடி கடன் வாங்கி இருந்தார்.

பல ஆண்டுகள் ஆகியும் அவர் திருப்பிச் செலுத்தவில்லை. அவர் கொடுத்த 7 செக்குகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. இதையடுத்து நடிகர் ராஜ் பால் யாதவ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது டெல்லி கோர்ட்டில் தொழில் அதிபர் வழக்கு தொடர்ந் தார்.

7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. சில வாரங்களுக்கு முன்பு இருவரையும் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது.

அப்போது ராஜ்பால் யாதவுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவர் ரூ.11.20 கோடியை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அவரது மனைவி ராதா யாதவுக்கு ஜெயில் தண்டனை எதுவும் விதிக்கப்படவில்லை. அவர் ரூ.70 லட்சம் பணத்தை திருப்பி செலுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

தீர்ப்பை அடுத்து நடிகர் ராஜ்பால் யாதவ் உடனடியாக கோர்ட்டில் மனுதாக்கல் செய்து ஜாமீனில் விடுதலையானார்.

SCROLL FOR NEXT