ரஜினி 
செய்திகள்

நெஞ்சார வாழ்த்தியவர்களுக்கு இதயப்பூர்வமான நன்றி: ரஜினி

திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்களை கவுரவிக்கும் வகையில் வழங்கப்படும் தாதாசாகேப் பால்கே விருதை ரஜினி நேற்று பெற்றுக்கொண்டார்.

மாலை மலர்

திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதை இந்தி திரையுல உலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் அமிதாப்பச்சன் ஏற்கனவே பெற்றுள்ளார்.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கும், இயக்குனர் பாலச்சந்தருக்கும் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்துக்கு 2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.

நேற்று டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், பெரும்பாலான துறையை சேர்ந்தவர்கள், ரசிகர்கள், மக்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வாழ்த்துகள் தெரிவித்தவர்களுக்கு நடிகர் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘என்னை நெஞ்சார வாழ்த்திய அரசியல் தலைவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அனைத்துத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றி’’ எனத் தெரிவித்துள்ளார்.